தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தினை சேர்ந்த லட்சுமணப்பெருமாள் என்பவரது மகள் எபிலாதேவி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகன் ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். எபிலாதேவி திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தற்பொழுது எபிலாதேவி திருமணம் செய்ய மறுத்துள்ளது மட்டுமின்றி, வேறு பெண்ணை வரும் ஏழாம் தேதி பாலமுருகன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்யமால், நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தற்பொழுது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கும் படி எபிலாதேவி கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலமுருகன் உறவினர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய காதலன் பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி எபிலாதேவி கயத்தார் தாலூகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவருடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையெடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பனிடம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.