புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடர்பான தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியை துவக்கிவைத்த பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவடையும், ஜனவரி மாதத்தில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல் அமைச்சர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.
நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23,598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டுகளில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில்கூட போதைப் பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More