தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டியில்,ஆம் ஆத்மி குறித்து எழுப்பப்பட்டது அதற்கு, நாட்டின் எந்த பகுதியிலும் பணியாற்ற அனைத்து கட்சிக்கும் உரிமையுள்ளது. ஆனால், அந்த கட்சியை ஏற்று கொள்வதா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்பது குறித்து முடிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். பட்ஜெட்டை விட அதிகமாக வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் அறிவார்கள். குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கிடையாது என்றார்
மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா கூறும் போது, நாட்டில் சுதந்திரமான மற்றும் நடுநிலையான நீதித்துறை உள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறோம் எனக்கூறுபவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.
தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களில் இளைஞர்களை ஈடுபட தூண்டியது குறித்து ஏராளமான ஆதாரங்களை மத்திய அரசு திரட்டியது. அதில், அந்த அமைப்பின் செயல்பாடுகள் ஆட்சேபனைக்குரியதாக இருந்ததால், தடை செய்யப்பட்டது.
இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தின. இந்த அமைப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு சகித்து கொள்ளாது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களுக்கு எதிராக மோடி அரசு பொறுத்து கொள்ளாது.
குஜராத் தேர்தலில் தேசிய பிரச்னைகள் எழுப்பப்படுவது குறித்த கேள்விக்கு அமித்ஷா கூறுகையில், குஜராத் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்போடு தொடர்புடையது. இரண்டும் ஒன்றொடு தொடர்புடையது. தேசம் பாதுகாப்பாக இல்லாத போது, குஜராத் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதனால் தான் தேச பிரச்னை எழுப்பப்படுகிறது. எல்லை ஒட்டி அமைந்துள்ளதால், தேசத்தின் பாதுகாப்புக்கு மக்கள் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம்.
எல்லை மாநிலமான குஜராத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் பார்த்து கொண்டது எங்களது மிகப்பெரிய சாதனை. பா.ஜ., மீது மக்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கை காரணமாக இதனை நாங்கள் மக்களிடம் எடுத்து சொல்கிறோம்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் ஓட்டு வங்கி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 18 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இது அடுத்த தேர்தலில் கூடும். எதிர்காலத்தில் அங்கு ஆட்சி அமைப்போம். ஒடிசாவிலும் எங்களது வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியுள்ளோம். ஆந்திரா, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தொண்டர்கள் நிறைந்த கட்சியாக ஒரே நாளில் மாறிவிட முடியாது. அதற்கு காலம் பிடிக்கும். ஆனால், அந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்படுகிறோம்.
பிரதமர் மோடி எங்களது தலைவர். அவர் மிகவும் பிரபலமான தலைவர் என்பதை கட்சி நம்புகிறது. அவரது பெயரை பயன்படுத்தி ஏன் தேர்தலை சந்திக்கக்கூடாது? நாட்டில் மிகவும் பிரபலமான தலைவராகவும் உள்ளார். எங்களின் மிகப்பெரிய தலைவரின் பெயரை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. மோடி, முன்னால் இருந்து பணியாற்றுகிறார். இந்த தேர்தலில் பாஜ., எத்தனை இடங்களில் வெற்றி பெறும் எனக்கூற மாட்டேன். ஆனால், கடந்த முறையை விட அதிகளவிலான தொகுதிகள் மற்றும் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
பிரதமரின் செல்வாக்கு மற்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் ஆட்சி செய்த விதத்தை பார்த்தால், மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநில கட்சிகளுக்கு, அவர்கள் சார்ந்த மாநிலங்களை தாண்டி எந்த செல்வாக்கும் இல்லை. சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தாலும் அது குஜராத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக மட்டுமே வரும்.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், நாடு முழுவதும் அக்கட்சி பிரச்னைகளை சந்திக்கிறது. அது குஜராத்திலும் எதிரொலிக்கிறது. அரசியலில் , தலைவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பது எனது கொள்கை. ஒருவர் கடினமாக உழைப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி தான். ஆனால், அரசியலில் நீடித்த முயற்சிகளும் தேவை. எனவே ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
காஷ்மீரில் பொது மக்கள் குறிவைத்து கொல்லப்படுவது குறைந்துள்ளது. அது சமீப காலமாக இன்னும் குறைந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்ததும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் அறிவிக்கும். என்று அமித்ஷா கூறினார்.