திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் பேருந்து, ரயில் பயணத்தையே பயன்டுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை திருப்பதி வந்தது திருமலா விரைவு ரயில். பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கிச் சென்றனர்.
அப்போது எஸ் 6 முன்பதிவு பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. ,இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சத்தமிட்டனர். பின்னர், விரைந்து வந்து செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் எஸ் 6 முன்பதிவு பெட்டியின் கழிவறையின் மேல்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தால் திருப்பதி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் கழிவறையில் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் கழிவறையில் வீசி சென்ற சிகரெட் துண்டுகளே தீ விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கிய போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.