சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மிகப் பெரிய இழுபறிக்குப் பின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
மற்ற தொகுதிகளின் வெற்றி மாலையே உறுதியாகிவிட்ட நிலையில் திருமாவளவனின் வெற்றி மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. திருமாவளவன் முன்னிலை பெற்ற சுற்றுகளை அறிவிக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டும் சமூக வலைதளங்களில் பெருமளவுக்கு பரவி வந்தது. இந்நிலையில் தனி ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக சமூக ஆர்வலர்கள் பலர் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதி ஓவரைப் பார்ப்பது போன்ற பதட்டத்தில் சீட் நுனியில் காத்துக் கொண்டிருந்தனர்.
இறுதியில் ஒரு வழியாக நள்ளிரவில் தொல் திருமாவளவன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது வெற்றி அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட வரலாறு காணாத தாமதம் மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.