மதுபான கடைகளில் சில்லறை விற்பனையின் போது மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் , மதுபானம் விற்பனையின் போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கட்டு, மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும், மேலும் அந்த ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அளவு, அதன் விலை ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . அதோடு மட்டுமல்லாமல் கடைப்பணியாளர் ரசீதின் மீது கையொப்பமிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைகளில் ஸ்வைப் கருவிகளின் மூலம் விற்பனை செய்யும் போது, அதில் வரும் ஒப்புகை சீட்டின் பின்புறம் விவரங்களை எழுத வேண்டும் என்றும், அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மதுபானங்களின் விற்பனை விவரங்கள் குறித்து தனி ஏடு ஒன்றை பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.மேற்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.