புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் 120 தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு 561 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தர சான்றிதழ் பெற வேண்டும் அதற்காக இந்த ஆண்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வாகனங்களை ஆய்வு செய்து தணிக்கை செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி இலுப்பூர் ஆகிய 3 இடங்களில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏதாவது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சரி செய்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படும் அதிலும் அவர்கள் சரிசெய்யாவிட்டால் பள்ளி வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்,
இதேபோன்று சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்றால் அந்த சரக்கு வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இதை உறுதி செய்வதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசாரும் ஆகியோர் இணைந்து அடிக்கடி தணிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் டூரிஸ்ட் வாகனங்களில் மாணவ மாணவிகளை ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதேபோன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதை தடுப்பதற்காக அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.