புதுக்கோட்டை திருக்கட்டளை சாலையில் 13 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. அந்த கிடங்கில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் தினந்தோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து, ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கரும் புகை மூட்டம் சூழ்ந்து. இதனை அடுத்து புதுக்கோட்டை மற்றும் சிப்காட் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சியிலிருந்து 3 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது நகராட்சியில் நிலவி வருவதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியாகும் புகையினால் காந்திநகர், போஸ் நகர், லட்சுமி குமரப்பா நகர், திருக்கட்டளை உள்ளிட்ட பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் குப்பை கிடங்குக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான தைலமரகாடு மற்றும் குடியிருப்பு பகுதியிலும் இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தீ பரவாமல் இருப்பதற்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குப்பைகளை அகற்றும் பணியிலும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் அவ்வப்போது குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிவதும் தீயணைப்புத் துறையினர் அணைப்பதும் வாடிக்கையாகி உள்ளது இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண சமூக ஆர்வலர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.