![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/iStock-181126519-1024x683.webp)
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அவர்கள் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமின்றி ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவது ஒரு நல்ல போக்காகும்.
ஆனால் ஒரு திட்டத்தை தயாரித்து அதை விரைவில் செயல்படுத்துவது மிகவும் அவசியம் என உலக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் ஆட்சியை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை அமெரிக்க முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.அமெரிக்க இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சந்தையை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![அமெரிக்காவின் நிபந்தனையால் நிர்க்கதியான சிறிலங்கா! | World Bank Restructuring Measures Accelerated](https://cdn.ibcstack.com/article/22531440-97fd-45b4-9715-34f12fe466a1/22-6337bfda06624.webp)
இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க சீனா, இந்தியா போன்ற கடன் வழங்கும் நாடுகளும் தலையிட வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு அதன் நிறைவேற்று சபை எந்த காலப்பகுதிக்கு அனுமதியளிக்கும் என்பதை குறிப்பிட முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள நிலையில் இந்தத் கருத்துகள் வெளியாகி உள்ளன.சமகாலத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளது. அதில் பெரும்பாலானோர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழலை ஒழிக்கமாறு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது, இது அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.