பாலின வேறுபாட்டை கடந்து இன்று பல திருமணங்கள் நடந்து வருகின்றன. வெறும் ஆண், பெண் என்று மட்டும் இல்லாமல், வெவ்வேறு பாலினங்கள் அல்லது ஒரே பாலினம் என இப்படி உலகமே வேறு ஒரு தளத்துக்கு மாறி உள்ளது. ஆனால், அப்படி நம்பி வரும் நபர்களை அன்பு என்கிற வலையில் வீழ்த்தி கழன்று கொள்வது சகஜமாகி உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/GENDER.jpg)
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னூர் பகுதியிலுள்ள வி.ஆர்.சித்தார்த்தா கல்லூரியில் ஆந்திராவின் பெனமாலூறுவை சேர்ந்த அலோகம் பவன் குமாரும், கிருஷ்ணா லங்காவை சேர்ந்த எல்லி நாகேஸ்வர ராவும் ஒன்றாக பி.எட் படித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. பின்னர் அந்த நட்பு, காதலாக மலர்ந்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/LOVE-NEW.jpg)
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு படிப்பை முடித்த இருவரும் கிருஷ்ணா லங்கா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாகவே தங்கி இருந்து மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தனர். இப்படியே காலம் சென்று கொண்டிருக்க இருவரும் ஒரு நாள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து டெல்லி சென்று வாழலாம் என திட்டமிட்டனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/M-NEW-1.jpg)
11 லட்சம் வரை செலவு செய்து பவன் குமாருக்கு அங்கு பாலின மாறுபாட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் தனது பெயரை பிரமராம்பிகா எனவும் மாற்றிக்கொண்டார். இவ்வளவு செலவும் செய்து, மேலும் 26 லட்சம் பணம், சுமார் 10 சவரன் நகைகள் என இவை அனைத்தையும் நாகேஸ்வர ராவ் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்கிற நம்பிக்கையில் அவரிடம் கொடுத்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/MONEY-AND-JEWEL.jpg)
மேலும் திருநங்கையாக மாறிய நிலையில், அவரை வீட்டை விட்டு விரட்டி உள்ளார். விரக்தியில் பெனமாலூறு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கே சென்று விட்டார் பவன் குமார் என்கிற பிரமராம்பிகா. அதே போல ஏமாற்றிய காதலன் நாகேஸ்வர ராவ் அவனின் தாயார் விஜயலட்சுமியுடன் மங்களகிரியில் குடிபெயர்ந்து விட்டார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/GENDER-3.jpg)
இது குறித்து மங்களகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பிரமராம்பிகாவை போலீசார் கிருஷ்ணா லங்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறி உள்ளனர். எனவே நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/GENDER-1-1.jpg)
திருமணத்துக்காக ஆண் திருநங்கையாக மாறி இறுதியில் ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருநங்கையாக மாறிய ஆணுக்கு நியாயம் கிடைக்குமா?