Mnadu News

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு!

அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் மீட்புப்பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாயமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களை துருக்கி ஆளில்லா விமானம் கண்டுபிடித்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது. மலைப்பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சுற்றியும் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends