Mnadu News

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது.

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் ஏழு மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்ஸான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு அந்தந்தப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக் கொண்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் விளாதிமீர் புதின் அண்மையில் வெளியிட்டார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு;, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தது. இந்நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share this post with your friends