Mnadu News

ஒகேனக்கல்லில் காவிரியில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி.

கர்நாடக மாநில காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீரும், தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் தொட்டல் லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து .55 ஆயிரம்; கன அடி வீதம் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.
வெள்ளப்பெருக்கினால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் அனைத்தும் நீரில் மூழ்கியும், நடைபாதை, பரிசல்துறை, கரையோர பகுதியில் உள்ள வீடுகள் விளை நிலங்கள் நீரில் மூழ்கின .
தற்போது இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டு வரும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளதாலும், நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்துள்ளதாலும் காவிரி ஆற்றில் நீர் வரத்து நாளுக்கு நாள் சரிந்து வந்தது.
,கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் அருவிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் 13 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, கோத்திகல் பிரதான அருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசல் பயணம் மேற்கொண்டனர். அதோடு, சில சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Share this post with your friends