Mnadu News

கத்திக்குத்தில் முடிந்த வாய் தகராறு! கொத்தனார் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் 38 வயதான சதீஷ்குமார். இந்த நபர் கொத்தனாராக பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 30 வயதான முருகன் என்பவரும் கொத்தனாராக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது சதீஷ்குமார் டாஸ்மாக்கில் மது வாங்க சென்றார். முத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 30 வயதான யுவராஜ் என்பவரும் அதே மதுபானக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார். அவரிடம் முருகன் பேசிகொண்டிருந்தார். பீர் பாட்டில் வாங்கி வந்த சதீஷ்குமார் முருகனை அழைத்ததாக தெரிகிறது. அப்போது என்னுடன் பேசி கொண்டிருக்கிறவரை எப்படி அழைக்கலாம் என்று சதீஷ்குமாரை யுவராஜ் திட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதில் யுவராஜ், சதீஷ்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தன்னுடைய கையில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து யுவராஜின் இடது கைக்கு கீழே குத்தியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக உத்திரமேரூர் அரசு மருதுவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது சம்பந்தமாக உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Share this post with your friends