வருகிற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18ற்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் ஆரம்பித்துப் பேசினார்.
அப்போது விளாத்திக்குளம் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறும் மேலும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கனிமொழிக்கு (திமுக வேட்பாளர்) தங்கள் பொன்னான வாக்குகளை செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை என்று சொல்வதற்கு பதிலாக எதிர்க் கட்சி வேட்பாளர் கனிமொழி பெயரைக் கூறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தமிழிசை எனச் சொல்ல சொன்னதும் சுதாரித்துக் கொண்டு தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என மாற்றிச் சரியாக பேசினார்.