Mnadu News

கோவை கார் வெடிப்பு:தமிழகம் தழுவிய என்ஐஏ சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு மாநில போலீஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா , முகமது அசாருதீன, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், பிரச்சார வீடியோக்கள் உட்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கார் வெடிப்பில் இறந்த முபின் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. சம்பந்தப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 6 பேரையும் வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழகத்தில் சென்னை, கோவை, திருவள்ளுர், திருப்பூர், நீலகரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை ஆகிய இடங்களிலும், கேரளா மாநிலத்தின் பாலக்காட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாலை 4.20 மணி முதல் நடந்து வந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
சென்னையில் மன்னடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினுடன் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. திருப்பூரில் ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறையில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின்போது, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சிலரிடம் என்ஐஏ விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

Share this post with your friends