சிறு மழலைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து விளையாடுவது வழக்கம், அந்த வகையில் கிழே கிடக்கும் கல், மணல் பேப்பர் என கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் வாயில் போடும். இதன் அடுத்த கட்டமாக ஊக்கு, இரும்பு போன்ற பொருட்களை வாயில் போட்டு முழுங்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

இதே போல கடந்த மாதம் செல்போன் சார்ஜர் வயரை குழந்தை ஒன்று கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிகழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று மற்றொரு சம்பவம் சென்னையில் தற்போது நடந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மணலி மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி நந்தினியின் 2 வயது பெண் குழந்தை லட்சுமி வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது.

அப்போது கட்டில் அருகே ஸ்விட்ச் போர்டில் மாட்டியிருந்த கொசு விரட்டியை எடுத்து கையில் வைத்துள்ளது. சிறிது நேரத்தில் வாயில் வைத்து அந்த மருத்தை தெரியாமல் குழந்தை உறிஞ்சியுள்ளது. அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயை குழந்தையின் வாயில் நுரை தள்ளியுள்ளது. தொடர்ந்து குழந்தை மயங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தை லட்சுமியை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு வந்துள்ளனர். அங்கு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை லட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை எடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குழந்தை கொசு விரட்டி மருத்து குடித்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.