Mnadu News

சென்னையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இருவர் பலி! போலீசார் விசாரணை!

மதுரையில் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் நாகராஜ். இவருடைய மகன் 27 வயது கோபிகிருஷ்ணன் . இவர் சென்னை திருவேற்காட்டில் காடுவெட்டி பகுதியில் நண்பருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவேற்காட்டை அடுத்த வெற்றிலைதோட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று கோபிகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான பெண் வண்டலூரில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பது தெரியவந்தது. ஆனால் அவர், கோபிகிருஷ்ணனிடம் லிப்ட் கேட்டு வந்தாரா அல்லது அவருக்கு தெரிந்தவரா என்பது தெரியவில்லை. விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை பாகங்கள், தசைகள் சாலைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகு அங்கு சிதறிக் கிடந்த உடல் பாகங்களை காகங்கள் கொத்தித் தின்ற காட்சி அப்பகுதியில் சென்றவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Share this post with your friends