Mnadu News

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை ஆணையர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் வந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 35 வயதான கொய்டேம் அரிகே வோல்டி மைக்கேல் என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அதோடு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்த டிராலி சூட்கேசின் அடியில் ரகசிய அறை அமைத்து அதில் விலை உயர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதையடுத்து அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 729 கிராம் மேத்தோ குயிலோன் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த எத்தியோப்பியா நாட்டு வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் போதை பவுடரை யாருக்காக கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை கடத்தல் கும்பல் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக எத்தியோப்பியாவில் இருந்து அதிகளவில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இதுவரை 125 கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன், ஹெராயின் பிடிபட்டு வெனிசூலா, அங்கோலா, தான்சானியா நாட்டு பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Share this post with your friends