Mnadu News

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை முதல் 16 தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பாலி நகருக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். பாலியில் 45 மணி நேரம் செலவிடவிருக்கும் பிரதமர் மோடி, அங்கு சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 10 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பு, இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என பிரதமர் மோடியின் இப்பயணம் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.,ஜி-20 மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.அதோடு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார். உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளார்.
இதன்பின், பாலியில் நாளை நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்றுகிறார். ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். டிசம்பர் மாதம் 1-இல் அப்பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends