Mnadu News

தங்கலான் ஷூட்டிங் நிறைவு! நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி டுவீட்! 

பா. ரஞ்சித்: 

“அட்டகத்தி” என்கிற படத்தின் மூலம் எளிய மக்களின் வாழ்வியலை எளிய திரை மொழியில் திரையில் பிரதிபலிக்கும் சில இயக்குனர்களில் பா. ரஞ்சித் குறிப்பிட தகுந்தவர். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என மக்களுக்கான படங்களை மக்கள் மொழியில் வழங்கி இன்று தவிர்க்க முடியாத தமிழ் சினிமா இயக்குநராக உருவெடுத்து உள்ளார் பா.ரஞ்சித். 

தங்கலான்: 

விக்ரம்- பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி நிறைவடைந்துள்ள படம் தான் “தங்கலான்”. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். பல மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த “தங்கலான்” ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என நடிகர் விக்ரம் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

“தங்கலான்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. பசுபதி பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்த நிலையில், இந்த வித்தியாசமான காம்போவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வந்தது.

கோலார் தங்க வயல் பின்னணியில் : 

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக அவர்களின் எழுச்சி போன்றவற்றை மையமாக வைத்து “தங்கலான்” உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக படப்பிடிப்பின்போது விக்ரமுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சில நாட்கள் ஓய்வெடுத்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். தற்பொழுது தங்கலான் ஷூட்டிங் நிறைவடைந்து உள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்நிலையில், தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் முயற்சியிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this post with your friends