மழைத் தொடர்பாக வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது தமிழகம், புதுச்சேரி பகுதிகளை நோக்கி நகர்ந்து அரபிக்கடல் நோக்கி செல்லக்கூடும்.
இதனால், கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 சென்டி மீட்டர், மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணிநேரத்தில், டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய அரபிக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பேசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். என்று அவர் கூறி உள்ளார்.