Mnadu News

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு சோலார் தகடுகள்.

தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனாஸ், அன்பளிப்புகளை வழங்குகின்றன, சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வழங்குகின்றன.
அந்த வகையில், சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்-எஸ்ஆர்கே நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த்பாய் தோலாக்கியா, தனது நிறுவனத்தின் பணி புரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீப ஒளி திருநாள் பரிசாக சூரிய மின் தகடுகளை வழங்கி உள்ளார்;.
இது போன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது.
பரிசு குறித்து தொழிலதிபர் கோவிந்த்பாய் தோலாக்கியா பேசுகையில்: நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்தும், அதிகரித்து வரும் எரிசக்தி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சூரிய மின் தகடுகள் வழங்கப்பட்டுள்ளது, அதை அவர்களின் வீடுகளில் நிறுவுவதன் மூலம் ஆண்டு முழுவதும் மின்சாரத்தை சேமிக்க முடியும். என்று கூறினார்.
அதே போல், சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால், தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார் மற்றும் பைக்குகளை வழங்கியுள்ளார். அவர் தனது 8 ஊழியர்களுக்கு கார்களையும், 18 ஊழியர்களுக்கு பைக்குகளை பரிசளித்துள்ளார். இதற்காக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ருபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று கால நெருக்கடியின் போது ஊழியர்கள் தனக்கு முழு ஆதரவளித்ததாகவும், அவர்களுக்கு இப்போது செய்ய வேண்டியது எங்கள் கடமை என்று ஜெயந்தி லால் கூறினார்.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாக்கியா, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதில் பிரபலமானவர். 2014 ஆம் ஆண்டில், அவர் தனது ஊழியர்களுக்கு 491 கார்கள் மற்றும் 207 பிளாட்களை போனஸாக வழங்கினார். 2016 ஆம் ஆண்டு தீபாவளியன்று தனது ஊழியர்களுக்கு 400 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆயிரத்து 260 கார்களை பரிசாக வழங்கினார். 2018 ஆம் ஆண்டு 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் கார் பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends