தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் 23 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. லட்சுமிதேவிபேட்டா (முலுகு மாவட்டம்) மற்றும் சிட்யாலில் (ஜெயசங்கர் பூபாலப்பள்ளி) முறையே 64.98 செ.மீ மற்றும் 61.65 செ.மீ. மழை பதிவானது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/telgana-1024x768.jpg)
மேலும், முலுகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கொட்டிய மழையால் அங்குள்ள ஒரு கிராமம் வெள்ளக்காடானது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடம் தேடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 4 பேர் தப்பிய நிலையில், 8 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தேகிக்கபடுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/telgana-1-1024x768.jpg)
இந்நிலையில், மாநிலம் முழுவதும் 27 தற்காலிக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 3 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/telgana-2.jpg)