Mnadu News

பிரதமர் மோடி தமிழகம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை 19 ஆம் தேதி, கேலோ இந்தியா, விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதோடு, திருச்சி, ராமேஸ்வரத்திற்கும் ஆன்மீகப் பயணமாக, 3 நாட்கள், தமிழ்நாட்டில் பிரதமர் தங்கி இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

இதனை ஒட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி, ஐ ஜி லவ்குமார் தலைமையில், எஸ்பிஜி குழுவினர், டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலைய பகுதிகளை ஆய்வு செய்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் விமான நிலையத்தில் நடத்தினர். அதோடு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தினர்.

இதை அடுத்து சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகள் முழுவதிலும், குறிப்பாக சென்னை பழைய விமான நிலையப் பகுதிகளில், நேற்று நள்ளிரவில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends