Mnadu News

பீகாரில் பெண் கொடூரமாக கொலை! நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் பஸ்ரஹா கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான சுலேகா தேவி. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்கும் நிலப்பிரச்சனை காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலப்பிரச்சனை காரணமாக கடந்த 2014 ஆண்டு சுலேகா தேவியின் கணவர் மற்றும் மைத்துனர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண், அவரது நெல் வயலில் நாற்றுக்களை நட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்கில் வந்த 4 பேர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி , அவரை பலமுறை கட்டையால் அடித்து கொடூரமாக பல பாகங்களை சிதைத்து கொலை செய்து உள்ளனர். 

இந்த நிலையில், அப்பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டு மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். நிலத்தகராறு பிரச்சனையில் பெண் ஒருவர் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது பீகாரில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this post with your friends