தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல்
அவ்வழியாக வந்த எஸ்பி வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை மற்றும் தீபாவளி சீட்டு பண்டு நடத்திவந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார். அவரிடம் தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில் உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டு சீட்டு கட்டிவந்துள்ளனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/5.1-1-1024x482.png)
மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏஜென்ட்டுகள் நியமித்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. தீபாவளி வருவதால் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார். இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/5.3.png)
இதுபற்றி அறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து வெங்கல் காவல் நிலையம், மாவட்ட எஸ்பி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடை முன் திருநின்றவூர் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண் வாகனமும் போக்குவரத்து நேரிசலில் சிக்கியது சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பெரியபாளையத்திலிருந்து திருநின்றவூருக்கும், திருநின்றவூர் பகுதியில் இருந்து பெரியபாளையம் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்து தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனம் கார் உள்ளிட்டவைகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிவிரைவுப்படை காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொண்டு சென்றனர். கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு தலைமறைவான ஜேபி ஜோதியை கைது செய்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.