Mnadu News

மதுபான முறைகேடு வழக்கு: அரவிந்தோ பார்மா இயக்குநர் கைது.

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய மதுபான கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து டெல்லியின் கலால் கொள்கை 2021-22 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். இது தொடர்பாக டெல்லி துணை முதல்-அமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 7-ஆம்; தேதி அமலாக்க இயக்குனரகம் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஐதராபாத்தில் உள்ள 35 இடங்களில் சோதனை நடத்தியது. சில மதுபான வினியோகஸ்தர்கள், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், பெர்னார்ட் ரிக்கார்ட் மதுபான நிறுவன பொது மேலாளர் பினாய் பாபு, அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி உள்ளிட்ட 2 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் இந்த 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மதுபான உற்பத்தி நிறுவனமான இண்டோஸ்பிரிட்டின் நிர்வாக இயக்குனர் சமீர் மஹந்த்ருவையும் அமலாக்க இயக்குனரகம் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டெல்லி துணைநிலை ஆளுநர்; உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends