Mnadu News

மதுரையில் அரங்கேறிய கொலை! வாலிபர் கைது!

மதுரை மாவட்டம் ,அழகர்கோவில், கரும்பாறை பகுதியிலுள்ள கன்னிமார் கோவில் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அப்பன் திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது வெளிச்சதுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்தவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களில், மூதாட்டியை வாலிபர் ஒருவர் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர், வாடிப்பட்டி தாலுகா கட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த 28 வயதான கருப்பையா என்பது தெரியவந்தது.

மேலும் அவர்தான், மூதாட்டியை தனியாக அழைத்து சென்று காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றிற்காக அவரை கொலை செய்ததாக கருப்பையா ஒப்புக்கொண்டார். மேலும், இறந்த மூதாட்டியின் விவரங்கள் குறித்த விசாரணை துவங்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெரியாதவர்கள் யார் வந்து எதை சொன்னாலும், கேட்டாலும் அதற்க்கு பதில் கூறாமல் கடந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

Share this post with your friends