**கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கணவனை இழந்த பெண் 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி
**கடந்த இரண்டு வருடமாக வார குறை தீர்ப்பு கூட்டத்தில் 50 மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய மாவட்ட நிர்வாகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கல்சிறுநாகலூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி செண்பகம் இவர்களுக்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளுமே மாற்றுத் திறனாளி குழந்தைகள். இந்த நிலையில் ஏழுமலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் வறுமையில் கூலி வேலைக்குச் சென்று தினம் தோறும் பிழைப்பு நடத்தி வருகிறார். இதனிடையே கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் தன்னுடைய குழந்தைக்கு வறுமையின் பிடியில் வளர்த்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு வேலையை தனக்கு ஒதுக்க வேண்டும். அதன் மூலம் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் கணவனால் கைவிடப்பட்ட சலுகையின் அடிப்படையில் அரசு வேலை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர குறை தீர்ப்பு கூட்டத்தில் சுமார் 50 முறை மனு அளித்து தாழ்மையுடன் கேட்டு வந்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/14.1.png)
ஆனால் மாவட்ட நிர்வாகம் அவருக்கு அரசு வேலை வழங்குவதை அலட்சியப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தில் உள்ள அரசு வேலைகளில் அதே பகுதியை சேர்ந்தவரிடம் லஞ்சம் பெற்று காலியிடங்களை அதிகாரிகள் நிரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/14.2.png)
இதனால் ஆத்திரமடைந்த செண்பகம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென இரண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மேலும் பரிந்துரைப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தற்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.