வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி 21 வயதான ஹேமலதா. இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஹேமலதா கருவுற்ற நிலையில், அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் ஹேமலதா தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். கடந்த 26 நாட்களுக்கு முன்பு இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/airforce.jpg)
இது குறித்து ஹேமலதா தனது கணவனிடம் கூறி மகிழ்ந்தார். இந்தநிலையில் மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/baby-1024x616.jpg)
மேலும், ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்தம் கொட்டியபடி வலி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தை கதறி துடித்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/baby-kill.jpg)
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றம் செய்யப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை வலை வீசி தேடி வருகின்றனர். பிறந்து 26 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/IMG_20230712_134014.jpg)