கொரோனவை தடுக்க கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு அரிதினும் அரிதாக ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில், அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸென்கா ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் பலரும், தங்களது தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருந்ததே என்று நினைவுக்கு வர அதனை துழாவியபோது, தற்போது பதிவிறக்கம் செய்யும் சான்றிதழ்களில் மோடியின் படம் இல்லாமலிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பதும் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டே பிரதமர் படம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி விவாதத்துக்கு உள்ளான நிலையில், இதனை பேசும்பொருளாக்கியிருக்கிறார்கள்.இதற்கும் படம் நீக்கப்பட்டதற்கும் சம்பந்தமில்லை என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.