மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஆரம்பித்த உயர் சிகிச்சை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தற்போது நடைமுறைக்கு வருவதில் சிறிது கால தாமதம் ஏற்படுகிறது . மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணி மந்தமாக நடக்கிறது.
மதுரையில் சுமார் 1,264 கோடி ரூபாயில் செலவு செய்த எய்ம்ஸ் மருத்துவமனை, தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை, தஞ்சாவூர், நெல்லையில் உயர் சிகிச்சை பல் நோக்கு மருத்துவமனைகளை பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். உயர் சிகிச்சை பல் நோக்கு மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 37 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 160 செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு 100 அலுவலர்கள் என 447 பேர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சுமார் ஐந்து மாடி தளங்களை கொண்ட மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் செலவிட்ட தொகை 90 கோடி ரூபாய், மருத்துவ உபகரணங்களுக்கு 46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிரே உள்ள விபத்துக்காய மருத்துவமனையை இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. பராமரிப்பு, நிர்வாக செலவினமாக ஆண்டுக்கு 33 கோடி ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது . இங்கு ஆறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உலகத்தரத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு மட்டுமே தற்போது செயல்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி மந்தமாக நடக்கிறது. மருத்துவமனை முழு செயல்பாட்டுக்கு வர மேலும் ஆறு மாதங்கள் ஆகும்.
டீன் டாக்டர் வனிதா கூறுகையில், ”உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளின் ஒவ்வொரு அரங்குகளின் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் மருத்துவமனை முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார் .