சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றார்.
பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார்.