Mnadu News

8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் முக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மெல்ல குறைத்து வந்த ஆர்பிஐ, கடந்த 2019ஆம் ஆண்டு முற்றிலுமாக நிறுத்தியது. அதோடு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் முக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து மெல்ல குறைத்தும் வருகிறது. அதாவது, 2020ஆம் ஆண்டில் 274 கோடி 2 ஆயிரம் முக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது இது 214 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் வாக்லே தொழிற்பேட்டையின் ஐந்தாவது பிரிவில், கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் கும்பலை, காவல்துறையினர் கண்டுபிடித்து இன்று காலை சோதனை நடத்தினர் அப்போது, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் முக மதிப்பு கொண்ட கள்ள ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இவர்களுடன் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Share this post with your friends