மதுரை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ,மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூறுக்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
- ஆர்.சி. மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும்.
- உணவு பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும்.
- அதில் ,உணவு தயாரிப்பு தேதி, காலாவதியான நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம்.
- உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ‘கலரிங்’ சேர்க்கக் கூடாது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அதோடு அதிரடியாக கடைகளில் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம் என்றார்.