இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவர மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, 24-ந் தேதி (இன்று) முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடிக்க சென்று கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு படகு, 4 மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.