இலங்கையில் கடந்த 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வீட்டில் தற்கொலைப்படை வீரர்கள் தங்கி இருப்பது தெரிய வந்தது.
அவர்களை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மேலும் பல கட்டுப்பாடுகளை இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
அதில் ஒரு பகுதியாக பர்தா, முகங்களை மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக சிறிசேனா தெரிவித்தார்.