சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த விண்கலம், வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்கு நேரடியாகச் செல்லும் பட்சத்தில் எரிபொருள் செலவு அதிகம் என்பதால், புவி வட்டப் பாதையில் விண்கலத்தை சுற்ற வைத்து, அதன் சுற்றுத் தொலைவை மெல்ல மெல்ல அதிகரிக்கச் செய்வது இஸ்ரோவின் திட்டமாக இருந்தது.அதன்படி, சந்திரயான் 2 விண்கலமானது புவியை சுற்றும் தொலைவு 5 முறை அதிகரிக்கப்பட்டது. கடந்த புதன் கிழமை அதிகாலை 2.21 மணி அளவில் புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரயான் 2ஐ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றினர்.
புவி வட்டப் பாதையில் இருந்து விடுபட்ட சந்திரயான் 2 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. இந்நிலையில், விண்கலத்தை நிலவின் வட்டப் பாதைக்குள் செலுத்தும் சவாலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக செய்து முடித்தனர். நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்தும் நடைமுறை 28.9 நிமிடங்களுக்கு நீடித்தது.விண்கலத்தின் எஞ்சின் இயங்க வைக்கப்பட்டது. முடிவில் நிலவிலிருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 18 ஆயிரத்து 72 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 செலுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிலவை விண்கலம் சுற்றும் தொலைவு படிப்படியாக குறைக்கப்படும். நாளை பிற்பகல் 12.30 மணி தொடங்கி, 1.30 மணிக்குள்ளாக முதற்கட்டமாக சந்திரயான் 2 இன் சுற்றுத் தொலைவு குறைக்கப்படும்.அதன் பிறகு வரும் 28, 30 மற்றும் செப்டம்பர் ஒன்று ஆகிய தேதிகளிலும், நிலவின் சுற்றுத் தொலைவு படிப்படியாக குறைக்கப்படும். செப்டம்பர் ஏழாம் தேதி, நிலவில் இருந்து குறைந்தபட்சம் 30 கிலோ மீட்டர் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் தொலைவை சந்திராயன்-2 நெருங்கும் போது லேண்டர் நிலவில் தரை இறக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.