காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக போராட்டம் நடத்துவது தேவையற்றது என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லியில் திமுக போராட்டம் நடத்தவுள்ளது.இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர், டெல்லிக்கு பதில் காஷ்மீருக்கு சென்று திமுகவால் போராட்டம் நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விரும்பத்தகாத வார்த்தைகளை பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எதற்கு துண்டு சீட்டு என்று வினாவியுள்ள தமிழிசை, தன்னால் துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று கூறியுள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்குமா என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு மற்றும் மத்திய தலைமை முடிவு செய்யும் என்றும் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடவை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.