Mnadu News

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டிமீட்டரும், வேலூர் மாவட்டம் மேலாத்தூர், ஆம்பூரில் தலா 12 சென்டி மீட்டரும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர பரவலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends