Mnadu News

ஆங்கிலத்தில் பேசிய விஷாலை தமிழில் வாதிடுமாறு வலியுறுத்திய நீதிபதி…

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் விஷாலை தமிழிலேயே பேசுங்கள் என்று நீதிபதி மலர்மதி தெரிவித்தார்.கடந்த 2016-ம் ஆண்டு, சேவை வரித்துறையினர் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அவர் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கப்படாததாலும், சேவை வரி அலுவலகத்தில் ஆஜராகாத காரணத்தாலும், விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் முதல் முறையாக கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் பல முறை அவர் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.மீண்டும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று காலை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார் விஷால்.

அப்போது கடந்த சம்மனில் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி மலர்மதி விஷாலிடம் கேட்டபோது அவர் ஆங்கிலத்தில் பதிலளிக்க தொடங்கினார்.அப்போது குறிக்கிட்ட நீதிபதி உங்களுக்கு தமிழ் தெரிந்தால் நீங்கள் தமிழிலேயே பதில் கூறலாம் என்று நடிகர் விஷாலுக்கு அனுமதியளித்துள்ளார்.

Share this post with your friends