Mnadu News

பிரியாணியில் பல்லி விழுந்திருப்பதாக நாடகமாடி பணம் பறிக்க முயன்ற நபர் கைது…

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் ரயில் நிலையத்தில் பிரியாணியில் பல்லி விழுந்திருப்பதாக நாடகமாடி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற மும்பையை சேர்ந்தவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர் .ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வெஜிடேபிள் பிரியாணி வாங்கினார். சிறிது நேரத்திலேயே அங்கு வந்த அதே நபர் பிரியாணியில் பல்லி விழுந்திருப்பதாகவும், இதனை சாப்பிட்டதால் தனக்கு வாந்தி மயக்கம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இதனை உண்மை என நம்பிய கடை உரிமையாளர் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் எனக்கூறி ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார். இதனை அறிந்த ரயில்வே போலீசார் அந்த நபரை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் இதேபோன்று ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சமோசாவில் பல்லி விழுந்து இருப்பதாக கூறி பணம் பறித்ததாக ஒருவரை போலீசார் கைது செய்ததாக வீடியோவை ரயில்வே போலீசாரிடம் காண்பித்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சமோசாவில் பல்லி இருப்பதாக கூறி பணம் பறித்தது மும்பையை சேர்ந்த சுந்தர் பால் என்பது தெரிய வந்தது.

தற்போது குந்தக்கல் ரயில் நிலையத்திலும் பிரியாணியில் பல்லி விழுந்து இருப்பதாக கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் அதே சுந்தர்பால் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களை வாங்கி அதில் பல்லி விழுந்திருப்பதாக கூறி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பதையே வழக்கமாக சுந்தர் பால் செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Share this post with your friends