சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி.
மக்களை கவரக்கூடிய தலைவரால்தான் கட்சிக்கு வெற்றி. அப்படி கவரக்கூடிய தலைவராக மோடி உள்ளார். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு ஈர்க்க கூடிய தலைவராக மோடி உள்ளார்.
தலைவரை முன்னிறுத்திதான் வெற்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவியது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.
ஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம் என்பதால், ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது” என்று கருத்து தெரிவித்த அவர், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைக்கப்படும் என நிதின் கட்காரி கூறியதை பாராட்டியதோடு, மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .