Mnadu News

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைவு

கர்நாடக அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை நின்றதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் நீரின் அளவானது தற்போது நொடிக்கு 11 ஆயிரத்து 96 கன அடியாக உள்ளது.

இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நொடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லிலும் இதே அளவு நீர் பாய்கிறது. எனினும் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு 23,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி 20,000 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, நொடிக்கு 10,000 கன அடியும், கால்வாய் பாசனத்திற்காக நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 116.39 அடியாகவும், நீர் இருப்பு 87.82 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து மேலும் குறையும் என்பதால் உச்சபட்ச நீர்தேக்கும் உயரமான 120 அடியை அணை எட்ட தாமதமாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Share this post with your friends