விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இந்நிலையில், அவர் தற்போது முதன்முறையாக மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தெலுங்கு திரையுலகில் பிரமாண்டமாக உருவாகும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் நாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக நயன்தாரா மற்றும் அமிதாப் பச்சன், தமன்னா, ஜெகபதி பாபு என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அவர், நடிக்கும் மற்றொரு தெலுங்கு படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மருமகன் பன்ஜா வைஷ்னவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார்.
ரொமாண்டிக் காமெடியாக உருவாகும் இந்தப் படத்தின் மூலம் மனிஷா ராஜ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்று அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .