கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ஓசூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய கொம்பன் மற்றும் மார்க் எனப்படும் இரு காட்டு யானைகள், ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன.
விளை நிலங்களை சேதப்படுத்தியதோடு, 3 பேரை தூக்கி வீசியும், மிதித்தும் கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.இதையடுத்து கும்கி யானைகள் துணையுடன் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை சானமாவு வனப்பகுதி அருகே கதிரேப்பள்ளி என்ற இடத்தில் கொம்பன் யானை சுற்றித் திரிந்த போது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த கொம்பனை, கும்கி யானைகள் மூலமாகவும் ஜேசிபிக்கள் உதவியுடனும் வனத்துறையினர் நகர்த்தி கொண்டு வந்தனர்.லாரியில் ஏற்றப்பட்ட கொம்பன், அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட உள்ளது. மார்க் காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.